திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஒரு தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள் போதிக்கப்படுகிறது. இந்தபள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாரை தாக்கினர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வசந்தகுமாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் தந்தை உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தை சூறையாடினர். அங்கு நின்றிருந்த காரையும் சேதப்படுத்தினர்.
பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டிஜஜி வருண்குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
(ஹெச்.எம்)
இந்த சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி. கூறியதாவது:
மாணவி பாலியல் சீண்டல் வழக்கு சம்மந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் இதுபோன்று மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் நடைபெறாமல் தடுத்திட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், மேலும் இது ஒரு சம்பவம்தான் நடைபெற்றுள்ளதாக வேறு ஏதேனும் குற்றட்சாட்டுகள் உள்ளதா என விசாரணையில் தெரியவரும் . மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கைதான 4 பேர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலைமை மோசமானதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவு எனக்கூறி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். அவர் இன்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார்.
இந்த பள்ளியை மூடவேண்டும். அந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுததி வருகிறார்கள்.