Skip to content

மதுரை-போடி அகலபாதையில்…… 110 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது. போடி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதுபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரெயில் சேவையும் நாளை முதல் தொடங்குகிறது.

சென்னையில் இருந்து நாளை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் காலை தேனிக்கு வந்தடைகிறது.  ரெயில் போக்குவரத்து நீட்டிப்பை முன்னிட்டு மதுரை-போடி இடையே விரைவு ரெயில் சோதனை இன்று நடந்தது. 110 கி.மீ. வேகத்தில் இந்த விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணியளவில் 2 பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டது.

உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடிக்கு இந்த ரெயில் விரைந்து சென்றது. ரெயில் சோதனை ஓட்டம் நடந்ததால் ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட்கள், தண்டவாள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் ரெயிலை வேடிக்கை பார்த்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!