கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகள்களும், சுண்ணாம்பு துகள்களும் காற்றின் மூலம் பரவி வீடுகளில் விழுந்து அவதிப்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மூலிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்கள், சுண்ணாம்பு துகள்கள் காற்றின் வழியாக பறந்து சென்று குடியிருப்பு வீடுகளில் விழுந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலர்ஜியால் உடல்களில் பாதிப்புக்குள்ளாகி, சுவாசக்கோளாறு பிரச்சனைகளால் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் புகழூர் நகராட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தனர் .
இதனையடுத்து மூலிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள்,
காகித ஆலையின் இரண்டாவது நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை நிர்வாகத்தினர் விரைவில் இந்த பிரச்சினைகளை சரிசெய்வதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.