மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இவ்வழக்கு 2015-ஆம் ஆண்டு நாகை மாவட்ட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு, இக்கொலை வழக்கில் 2018-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பாதிரிகுப்பம் தினேஷ்குமார்(32) புதுபாளையம் சுரேஷ்குமார்(27) காராமணிகுப்பம் கமல்(30), செல்லாங்குப்பம் ஆனந்த்(27) ஆகியோரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு 25ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மேற்கூறிய நபர்களால் சமீரா பானு, கஜிதாபீவி ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தினேஷ்குமார், சுரேஷ்குமார், கமல், ஆனந்த் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.6,000 அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.