மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி நீதிமன்ற பணிகளை புறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனைச் சட்டம் , குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்குப் பதிலாக புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை கண்டித்தும், இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், அரியலூர் வழக்கறிஞர்கள் நேற்று முதல் ஒரு வார காலம் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். மேலும் இரண்டாவது நாளாக இன்று அரியலூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அரியலூர் நகர மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த வழக்கறிஞர்கள், தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு உடனடியாக இச்சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.