நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாகை வேதாரண்யம் கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் உணவுத்துறை, வேளாண்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர், அப்போது பேசிய விவசாயிகள் நாகை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களில் நெல்லை கொண்டு செல்லும் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு 40 ரூபாய் லோடுமேன்கள் லஞ்சம் கேட்பதாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு பின் பேசிய ஆட்சியர் அருண் தம்புராஜ்,, நெல்மூட்டைக்கு 40 ரூபாய் பணம் கேட்கும் லோடுமேன்களிடம், விவசாயிகள் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், கேட்பவர்களை பிடித்து போலீஸிடம் ஒப்படைங்கள் என்றும் அப்போதுதான் அவர்கள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறினார். மேலும் தங்களின் தேவை கருதியே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலைய லோடுமேன்களிடம் பணம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறீர்கள் என ஆவேசமாக பேசிய ஆட்சியர், அவ்வாறு கொடுக்கும் விவசாயிகள் பணம் இருக்கும் அகங்காரத்தில் இது போன்ற தவறான செயலை செய்வது குறித்தான புகாரும் தனக்கு வந்துள்ளதாகவும் கூறினார். லோடுமேன்கள் குறித்த விவசாயிகளின் புகாருக்கு, தங்களின் தேவை கருதி லஞ்சத்தை ஊக்கப்படுத்தி பயன்பெறுகிறீர்கள் என ஆட்சியர் விவசாயிகளை மடக்கிப் பிடித்து ஆவேசமாக பேசிய பேச்சு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.