கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். ராஜேந்திரனுக்கும், இவரது சகோதரர் ராஜ் மகன் குமார்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு கடைத்தெருவில் நின்றிருந்த ராஜேந்திரனை, கத்தியால் கழுத்து மற்றும் முகத்தில் குமார் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸார், வழக்குப் பதிந்து குமாரை கடந்த 19-ம் தேதி கைது செய்து புதுக்கோட்டை சிறையிலடைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
