கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த அஜித்குமார் (25) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து உள்ளனர்.
விசாரணையில், அவர் ஓட்டி வந்த வாகனம் பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பீளமேடு, சிங்காநல்லூர், இராமநாதபுரம் உள்ளிட்ட கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சூலூர், தாராபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, மொத்தம் 14 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
