Skip to content
Home » 36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்காக 2016ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 42,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கை கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா விசாரித்து தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக அந்த தீர்ப்பில், “மேற்கு வங்க மாநில வரலாற்றில் இதுவரை அறியப்படாத அளவுக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பயிற்சி பெறாத ஏராளமானோருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி ஏறக்குறைய 36,000 பேருக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. நியமனத்தின் போதுதிறன் அறியும் தேர்வு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. நேர்காணல் நடத்தப்பட்டதற்கான ஆதாரமோ அல்லது நியமனதாரர்களின் தகுதி குறித்தோ எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, நியமன நடைமுறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிகிறது. இதில் தொடக்க பள்ளிக் கல்வித் துறையின் அப்போதைய தலைவர் மாணிக் பட்டாச்சார்யா (தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.) மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. எனவே, எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல், தகுதியும் இல்லாத 36,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த 4 மாதங்களுக்கு தொடக்கப் பள்ளி துணை ஆசிரியருக்கு நிகரான ஊதியத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நியமனத்தில் பங்கேற்றவர்கள் இப்போது வயது வரம்பு கடந்திருந்தாலும் புதிய நியமன முறையில் பங்கேற்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!