கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி்யிருப்பதாவது: “தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் – பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் – திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – சென்னானூர், திருப்பூர் மாவட்டம் – கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் – மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது.
அதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வில் பெறப்பட்ட இரண்டு காலக் கணிப்பு முடிவுகள் வாயிலாக தமிழகத்தில் இரும்பு 4200 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டது உறுதி செய்ய முடிகிறது.
1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் – பத்தாம் கட்டம்
2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – மூன்றாம் கட்டம்
3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் – இரண்டாம் கட்டம்
4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் – இரண்டாம் கட்டம்
5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் – முதல் கட்டம்
6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் – முதல் கட்டம்
7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் – முதல் கட்டம்
8. மருங்கூர், கடலூர் மாவட்டம் – முதல் கட்டம்