Skip to content

என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்தது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.முரளிதரன்(முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன்) 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில் திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக சுவரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோஸ் வல்லூர், முன்னாள் எம்.பி.பிரதாபன் ஆகியோர் செய்த சதியால் கே.முரளிதரன் வீழ்த்தப்பட்டார். ஆகவே, தோல்விக்கு பொறுப்பேற்று 2 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த கட்சி நிர்வாகிகள் சுவரொட்டிகளை கிழித்தனர்.

இதுகுறித்து கே.முரளிதரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவியது. கட்சி தலைமை நிர்பந்தத்தால; தான் இங்கு போட்டியிட்டேன். வடகரா தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி. ஆகியிருப்பேன். கட்சிக்காக எனது கடமையை செய்ய முயன்ற போது, என்னை போட்டியிட கட்டாயப்படுத்தி பலிகடா ஆக்கி விட்டார்கள். அத்துடன் சுரேஷ் கோபியை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை திருச்சூருக்கு வந்து பிரசாரம் செய்தார்.

என்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுனில் குமாரை ஆதரித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.ஆனால், எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய எந்த காங்கிரஸ் தலைவர்களும் வரவில்லை. இனி நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. பொது வாழ்வில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!