Skip to content

ஒரு மாசமா “அண்ணன், தம்பி” எஸ்கேப்… கரூர் அதிமுகவினர் கடும் அதிருப்தி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக எழுதி பெற்றதாக அளித்த புகாரின் பேரில், வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் கரூரில் இரண்டு முறை சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவருடைய ஆதரவாளர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்மையில் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று காலை எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினரும், ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான கவின்ராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த சென்ற நிலையில், அவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தினரிடம் விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கரூர் திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவர் பசுபதி செந்தில் உள்ளிட்ட 3 பேரை நேரில் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் தொடந்து தலைமறைவாக இருப்பதால் அதிமுக பிரமுகர்களை தொடர்ந்து கண்காணிக்கும் சிபிசிஐடி போலீசார் அவ்வப்போது அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயபாஸ்கரின் இந்த நடவடிக்கை கரூர் அதிமுக பிரமுகர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!