Skip to content

கரூர்… போக்குவரத்து நெரிசல் குறைக்க காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்…

கரூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்க காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் கரூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தொழில் முனைவோர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாகிராபானு உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தொழிலதிபர்கள் மற்றும் வணிக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
அதேசமயம் காவல்துறை சார்பில் கரூர் மாநகரத்துக்குள் வரும் சரக்கு வாகனங்கள், நூல் வண்டி வாகனங்கள், கனரக வாகனங்கள், பார்சல் சர்வீஸ் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் கரூர் – கோவை பிரதான சாலையில் செல்வதற்கு பதிலாக அம்மா சாலை, காமராஜபுரம் ரோடு, வையாபுரி நகர் ரோடு, எம்ஜி ரோடு சாலை வழியாக செல்ல வேண்டுமென வலியுறுத்தினர்.

அதேசமயம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தொழில் நிறுவனத்தினரும், கடை உரிமையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், அவ்வாறு ஒத்துழைக்க தவறினால் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என டி எஸ் பி செல்வராஜ் எச்சரித்தார்.

error: Content is protected !!