தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், பெருமாள் துணைவியாருடன் எழுந்தருளினார். மக்கள் கோவிந்தா… கோவிந்தா… என பக்த
முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுந்தனர். திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. புரட்டாசி மாத 4-ஆம் சனிக்கிழமை மற்றும் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் முக்கிய பகுதிகளில் பேரிகாடுகள் அமைத்து ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். புரட்டாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மலை வீதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.