மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் வேளையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கும் மற்றும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.