கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் வாங்கலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றைய தினம் கரூர் மாநகராட்சி ராயனூரில் நடைபெறும் அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1,22,019 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.
மதியம் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறைஅலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஆய்வு நடத்துகிறார். மாலை 4.30 மணிக்கு கரூர் பிரேம் மகாலில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரிஅளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி பரிசு வழங்குகிறார். மாலை 5 மணிக்கு குதிரை எல்லை பந்தயத்தை அமைச்சர் துவக்கி வைத்து பரிசு வழங்குகிறார். 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கரூர் கோடாங்கி பட்டி பைபாஸ் ரோட்டில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு திமுக முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகளை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி சிறப்பாக செய்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி கலந்து கொள்ளும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரங்கத்தின் படங்கள் வெளியாகியுள்ளன..
