கரூர் மாநகரை ஒட்டிய பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைந்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் புதை மணல் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இரண்டு சிறுவர்கள் புதை மணலில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடன் வந்த சிறுவன் கத்தி கூச்சலிட அருகில் குளித்துக் கொண்டிருந்த நபர்கள் உள்ளே சென்று சிறுவர்களை மீட்டு வெளியே எடுத்து வந்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும், கரூர் நகர காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். புதை மணலில் சிக்கிய சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் புதை மணலில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் அமராவதி ஆற்றுப்படுகையில் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.