கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரில் வசித்து வருபவர் பிந்து. இவர், டாக்டர் . பிந்துவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா இளம் பெண் இயக்குனரான விஸ்மயா கவுடாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பிந்துவிடம் உடல் ஆரோக்கியம் குறித்து விஸ்மயா அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.
அதன்பிறகு, தான் புதிதாக இயக்கும் ‘டியர் கண்மணி’ படத்திற்கு பணம் தேவைப்படுவதாக பிந்துவிடம் அவர் கூறியுள்ளார். இதற்காக ரூ.6½ லட்சத்தை பிந்து கொடுத்துள்ளார். அந்த பணத்தை விஸ்மயா திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். பின்னர் கடந்த ஆண்டு (2024) ரூ.6½ லட்சத்திற்கு விஸ்மயா காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது கையெழுத்து சரியாக இல்லை என கூறி வங்கி அதிகாரிகள் காசோலையை நிராகரித்ததுடன் பிந்துவுக்கு பணமும் கொடுக்கவில்லை.
இதையடுத்து, ரூ.6½ லட்சம் கடன் வாங்கி தன்னை மோசடி செய்துவிட்டதாக பெங்களூரு கோர்ட்டில் விஸ்மயா மீது பிந்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இந்த ரூ.6½ லட்சம் கடன் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி பசவேஸ்வராநகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், இளம் இயக்குனரான விஸ்மயா மீது பசவேஸ்வராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம், விசாரணை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.