மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்(யுபிஎஸ்சி) 2022 ம் ஆண்டிற்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி ’ஜீீஜீ அகில இந்திய அளவில் 107வது இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகளும் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி டி.ஜே.சத்ரியா கவின் இந்திய அளவில் 169வது இடத்தை பிடித்து உள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசுச் செயலாளர் ஜெகந்நாதனின் மகள் ஆவார்.
தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச் செயலாளரும், கமிஷனருமான அதுல் ஆனந்தின் மகள் ஈசானி 291வது இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன் மகன் டாக்டர் அரவிந்த் 361வது இடத்தைபெற்றுள்ளார். இவர் தற்போது மருத்துவ மேற்படிப்பு (எம்.டி ஜெனரல்) படித்து வருகிறார்.