பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒலிம்பிக் கமிட்டியின் இந்த நடவடிக்கை குறித்து வினேஷ் போகத், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS- The Court of Arbitration for Sport) மேல்முறையீடு செய்தார். வினேஷ் போகத்தின் இந்த மேல்முறையீடு மீது இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார் அமெரிக்க ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர் ஜோர்டன் பரோஸ். இவர் கடந்த 2012 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்க பத்தகம் வென்றவர்.
வினேஷ் போகத்துக்கு ஆதரவாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளில் திருத்தம் தேவை என சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
அவை வருமாறு: 1. போட்டியின் 2வது நாளில் 1 கிலோ வரை எடை சலுகை வேண்டும். 2. எடை சரிபார்க்கும் நேரம் காலை 8.30 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட வேண்டும். 3. இறுதிப்போட்டியாளர்களில் ஒருவர் எடை காரணமாக நீக்கப்படும் முறையால் எதிர்காலத்தில் இறுதிப் போட்டிகளில் தோல்விகளே மிஞ்சும்.
4. அரையிறுதி வெற்றிக்குப் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இருவரின் பதக்கமும் உறுதி செய்யப்பட வேண்டும். அதாவது, அவர்கள் 2வது நாளில் எடை தகுதியில் தேறாவிட்டாலும். அவர்களின் பதக்கம் உறுதியாக்கப்பட வேண்டும். ஆனால், இரண்டாவது நாளிலும் எடைத் தகுதியில் தேறுபவருக்கே தங்க பதக்கம் என்றவகையில் விதியில் மாற்றம் செய்யலாம். 5. வினேஷுக்கு வெள்ளிப் பதக்கம் கொடுங்கள்.இவ்வாறு அமெரிக்க மல்யுத்த வீரர் வலியுறுத்தியுள்ளார்.