Skip to content

தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி… விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டம் இன்றும்ட தொடர்கிறது. இதற்கு அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி புதிய கட்டளை மீட்டு வாய்க்கால் மற்றும் உயர்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த உறுதி மொழியை எடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயிகள் பலமுறை மனு அளித்தனர். இருந்த போதிலும் இதுவரை புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவில்லை. பலமுறை வலியுறுத்தியும் தண்ணீர் திறந்து விடாததால் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறந்து விடும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து செங்கிப்பட்டியில் விவசாயிகள் தங்களது தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். பூதலூர் ஒன்றிய துணைத் தலைவர் சுப்பு, சாணூரப்பட்டி ஊராட்சி உதவி தலைவர் நந்தகுமார், விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் திருஞானசம்பந்தம், காங்கிரஸ் கட்சி விவசாயி பிரிவு அறிவழகன், பா.ஜ.க பூண்டி வெங்கடேசன், மாதர் சங்கம் தமிழ்ச்செல்வி, கிருபா, பாஸ்கர் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் தண்ணீர் திறந்து விடும் வரை போராட்டம் தொடரும் . ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அதேபோல் இன்றும் 2வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!