தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் சுமை தொடர்பாக தமிழக அரசு மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில், “2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ? தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.