Skip to content

குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு  இன்று வெளியிடப்பட்டது. முதல் முறையாக குரூப்-1 ஏவுக்கும்  தேர்வு நடத்தப்படுகிறது.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

 குரூப்-1 குரூப் 1 ஏ தேர்வுக்கான அறிவிப்பு  இன்று வெளியிடப்பட்டது.   எனவே இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத்தேர்வு ஜுன் 15-ம் நடத்தப்படும். குரூப் 1 பதவிக்கு 70 காலி பணியிடங்களும், 1ஏவுக்கு 2 காலி பணியிடங்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குரூப்-1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு குரூப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, குருப்-1 தேர்வுடன் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது.

முன்பு தனி தேர்வாக நடத்தப்பட்டுவந்த தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வெழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. ஆனால், தற்போது குரூப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படுவதால் வயது வரம்பு கட்டுப்பாடு இந்த பதவிக்கும் பொருந்தும். முன்பு தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வை தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது தொழிலாளர் மேலாண்மையில் டிப்ளமா பெற்ற பட்டதாரிகள் மட்டுமே எழுத முடியும்.

ஆனால், புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி, குரூப்-1-ல் அடங்கிய பதவிகளைப் போன்று ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மட்டும் இதற்கு போதுமானது.தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வு கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2023 டின்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் இடம்பெற்ற தொழிலாளர் உதவி தேர்வு திட்டமிட்டபடி அந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அதோடு அடுத்துவந்த 2024 தேர்வு அட்டவணையிலும் அத்தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை.

தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்களும், டிப்ளமா பெற்றவர்களும் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்து படித்து வருகின்றனர். எனவே, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு தொழிலாளர் மேலாண்மையில் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றவர்களுக்கு குரூப்-1-தேர்வுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வயது வரம்பு தளர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

error: Content is protected !!