Skip to content
Home » அரசு பள்ளிக்கு நிதியுதவி அளித்த புதுமண தம்பதி…. அரியலூரில் நெகிழ்ச்சி….

அரசு பள்ளிக்கு நிதியுதவி அளித்த புதுமண தம்பதி…. அரியலூரில் நெகிழ்ச்சி….

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவிந்தபுத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்தையன்-ராஜேஸ்வரி தம்பதியினர். முத்தையன் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் மணிகண்டன் என்பவருக்கும்,அதே ஊரைச் சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற ஸ்தலமான கங்காஜடேஸ்வரர் கோவிலில் இன்று ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனிடையே திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய சேமிப்பு பணத்தை தாம் படித்த அரசு பள்ளிக்கு கல்வி

வளர்ச்சி பணிகளுக்காக நிதி அளிப்பதற்கு மணிகண்டன் முன்வந்தார். இதனை தனது மனைவி பிரியங்காவிடம் தெரிவித்து, உடனடியாக திருமணம் முடிந்த கையோடு அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதுமணத் தம்பதிகள் நேரில் சென்றனர்.

அப்போது அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூபாய் 10 ஆயிரத்திற்கான தொகையை மணிகண்டன் பிரியங்கா தம்பதியினர் அளித்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பிறகு மண்டபத்திற்கு சென்றனர்.

பின்னர் இது குறித்து புதுமணத் தம்பதிகள் தெரிவிக்கையில் அரசு பள்ளியில் தாம் கல்வி பயின்றதாகவும் இந்த பள்ளிக்கு நம்மால் முடிந்த ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கல்வி வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளோம் இதற்கு முன்பு எனது தந்தை பல்வேறு உதவிகள் பள்ளிக்கு செய்துள்ளார். அந்த வகையில் பொதுமக்களிடத்தில் அரசு பள்ளியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தற்காக இதை நாங்கள் செய்தோம். இதன் மூலம் நாங்களும் எங்களது பெற்றோர்களும் மனதளவில் சந்தோஷத்தில் இருக்கிறோம் என தெரிவித்தனர். புதுமணத் தம்பதிகளின் இந்த செயல் காண்போரை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!