அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் கீழசிந்தாமணி கிராமம் கீழத்தெருவில் முருகேசன்(64) என்பவர் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது இளைய மகன் பட்டப்படிப்பு முடித்து வேலையின்றி இருந்த நிலையில் கீழசிந்தாமணி சேர்ந்த ராஜசேகர்(34) த/பெ ராஜேந்திரன் மற்றும் தற்போது சென்னையில் வசித்து வரும் அரியலூர் மாவட்டம் தாதம்பேட்டையை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன் (37) ஆகியோர் முருகேசனின் இளைய மகனுக்கு அரசு வேலை(பொதுப்பணித் துறையில்) வாங்கி தருவதாக போலி வாக்குறுதிகளை அளித்து ரூபாய் 3,00,000(மூன்று லட்சம்) பணம் கேட்டுள்ளனர்.கார்த்தி தன்னை ஒரு பத்திரிக்கை நிருபர் என்று கூறிக்கொண்டு முருகேசனிடம் பலமுறை போனில் தொடர்பு கொண்டு பேசி பணம் கேட்டுள்ளார்.இதனை நம்பிய முருகேசன் ரூபாய் 2,10,000 பணத்தை முன்பணமாக தந்து, மீத பணத்தை வேலை வந்தவுடன் தருவதாக கூறியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோர் இரண்டு ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தர மறுத்துள்ளனர். மேலும் ராஜசேகர், முருகேசனை பணம் கேட்டால் வெட்டி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து 10.08.2024 அன்று முருகேசன் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில், இது குறித்து புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அமரஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் புலன்
விசாரணையில் செய்தார். விசாரணையில் ராஜசேகர் மற்றும் கார்த்தி ஆகியோர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான காவலர்கள், ராஜசேகர் மற்றும் கார்த்திகை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். நீதிமன்ற நடுவரின் உத்தரவின்படி ராஜசேகரை ஜெயங்கொண்டம் கிளைச் சிறையிலும், கார்த்தியை திருச்சி மத்திய சிறையிலும் காவலர்கள் அடைத்தனர். மேலும் இவர்கள் இருவரும் மக்களை ஏமாற்றி பணம் பறித்து இதுபோன்று பல மோசடிகளை செய்ததாக தெரிய வருகிறது. இது குறித்து காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.