செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இந்த செய்தி இந்தியா முழுவதும் பரவியது. பாஜக, அதிமுக தவிர இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் கவர்னர் ரவியை கண்டித்தன. அதே நேரத்தில் கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் கிடையாது. இதனை சட்டப்படி சந்திப்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து , 5 மணி நேரத்தில் அமைச்சர் நீக்க உத்தரவை கவர்னர் திரும்ப பெற்றார். கவர்னரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடும். அப்படி போனால் அங்கு கவர்னருடன், மத்திய அரசையும் கண்டிப்பார்கள். எனவே அமைச்சரை நீக்கியதை திரும்ப பெறுங்கள் என மத்திய உள்துறை கண்டித்ததாகவும் அதனால் தான் ரவி பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி நள்ளிரவில் கடிதம் மூலம் தகவல் தெரிவித்தாராம்.
. இந்த சூழ்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுனர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடதுகிறார். கவர்னரின் அத்துமீறல்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகவும் திமுக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மணிப்பூர் கலவரம், கர்நாடகத்தில் தோல்வி என பல சறுக்கல்களை சந்தித்து வரும் பாஜகவுக்கு, கவர்னரின் இந்த நடவடிக்கையும் மேலும் சறுக்கலை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.