தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு தனியார் ஹோட்டலில் தமாகா பொதுச்செயலாளர் சுரேஷ்மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விடியல்சேகர், மாநகர, மாவட்ட தலைவர்கள் இன்டர்நெட் ரவி, ரவீந்திரன், குணா உட்பட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ்மூப்பனார் கூறியதாவது:
பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 14ம் தேதி மாலை தமிழ் மாநில காங்கிரசின் சார்பில் திருச்சி உழவர் சந்தையில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.
இந்த பிறந்தநாள் விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் தமிழக கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விஜய் தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர் தேவை என்றார். அந்த நல்ல தலைவர் ஜி.கே. வாசன் தான். நல்ல தலைவர்கள் வரவேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.