அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது உறுதியானது. இந்நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் மக்களை நாடி செல்கின்ற நிலையில் இருக்கின்றோம். உறுதியாக மக்களிடம் நீதி கேட்போம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த அதிமுக சட்டவிதியை காப்பாற்ற நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.
இது தொண்டர்களுக்கான இயக்கம். எப்படி கூவத்தூரில் நடந்ததோ அதேபோல் இந்த கட்சியை கைப்பற்றி தனது கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இது தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி. இது எடப்பாடி தாத்தா தொடங்கிய கட்சி அல்ல. அதற்காக தான் நாங்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறோம். இப்போது மக்கள் மன்றத்தை நாடி செல்வதற்கு எங்கள் படை தயாராக புறப்பட்டுவிட்டது. உறுதியாக மக்களிடத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எந்த தீர்ப்பும் எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பு வந்தபின்னர் தான் எங்கள் தொண்டர்கள் எழுச்சியுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.