சென்னை புறநகர் பகுதிகளிலும், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஓடுபாதை சரியாக தெரியவில்லை என்று மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் காலை 8 மணிக்கு சென்னை வந்த, மும்பை விமானம் பனிமூட்டம் காரணமாக வானத்தில் வட்டமிட்டது.
பின்னர் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்கள், பெங்களூரூ, கொல்கத்தா, கோவை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் வானத்தில் வட்டமடித்து அரை மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக தரையிறங்கின. அதே போல் சென்னையில் இருந்து மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், கொல்கத்தா உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு செல்லவிருந்த விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனிமூட்டம் காரணமாக விமானம் தாமதம் என்பது விமான நிலையங்களுக்கு வந்த பிறகே பயணிகளுக்கு தெரியவந்ததால் அவதிக்குள்ளாகினர்.
திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. நாமக்கல்லில் இருந்து திருச்சி வரும் வழி நெடுக பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வாகனங்கள் விளக்கை எரியவிட்டபடி வந்தன.