Skip to content
Home » சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் கோவையில் பலூன் விற்று வருகிறார். கோவையில் இவர்களுக்கு வீடு இல்லாத நிலையில் சாலை ஓரங்கள் மற்றும் கடை வாசல்களில் இரவு நேரங்களில் படுத்து உறங்கி கொள்வர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடகோவை மேம்பாலம் அருகே உள்ள தனியார் ப்ளைவுட் கடையில் வாசலில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலை 5 மணி அளவில் கையில் மது பாட்டிலுடன் வந்த நபர் ஒருவர் ரேகா உறங்கி கொண்டிருந்த போது, ரேகாவிடம் இருந்து 120 ரூபாயை திருடிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென ரேகா விழித்துக்கொண்ட நிலையில் , தனது கையிலிருந்த மது பாட்டிலால் ரேகாவின் கழுத்தில் தாக்கியதில் ரேகா கூச்சலிட, உடன் படுத்திருந்தவர்கள் விழித்துக்கொண்டனர்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றவரை பிடித்த சனோஜ் , கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பதும் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்து வரும் ஜெகன்நாதன் மீது மேட்டுப்பாளையம், காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் காயமடைந்த ரேகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், ஜெகநாதன் கடை வாசலில் படுத்திருந்த ரேகாவிடம் பணத்தைத் திருட முயலும் காட்சிகளும் தாக்கிய காட்சிகளில் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!