தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலமாக உயர்ரக கஞ்சா அதிகளவில் கடத்தி வரப்படுவதாக 2 நாட்களுக்கு முன் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் தனிப்படை அமைத்து, வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில்,
தாய்லாந்து தலைநகர் பாங்காங்க்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமானநிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையின் தனிப்படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இதில், தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்று வந்த பெண் உள்பட 3 இந்திய பயணிகளிடம் தீவிரமாக விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் 3 பேரின் உடைமைகளையும், அவர்களையும் தனியிடத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதித்தனர். இச்சோதனையில், அவர்களின் உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த , 24 காஸ்ட்லி சாக்லெட் பாக்கெட்டுகளில் ரூ.23.5 கோடி மதிப்பில் மொத்தம் 23.48 கிலோ உயர்ரக உலர் கஞ்சாவை 3 பேரும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், சாக்லெட் பாக்கெட்டுகளில் உயர்ரக உலர் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 இந்திய பயணிகளையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், இந்த 3 பேருமே கடத்தல் குருவிகள்தான். இவர்களை இக்கடத்தலுக்கு பயன்படுத்தி, தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்த முக்கிய கடத்தல் ஆசாமி வேறொருவர் என்பதும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, தாய்லாந்திலிருந்து சென்னைக்கு ரூ.23.3 கோடி மதிப்பில் உயர்ரக உலர் கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இக்கடத்தலுக்கு மிக முக்கிய கடத்தல் ஆசாமி மற்றும் அதன் தொடர்புடைய கும்பல்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.