கரூரில் ஒரிஜினல் இரிடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பலகோடி வரும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவரை சந்தித்துள்ளார். அவர்கள் தங்களிடம் இரிடியம் இருப்பது தொடர்பாக பேசியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தங்களிடம் இரிடியம் வாங்க ஆள் இருப்பதாக கூறி திண்டுக்கல் வரவழைத்துள்ளது அந்த மதுரை கும்பல். இதை நம்பி கரூர் காந்திகிராமத்தை சார்ந்த பொன்னரசு, தியாகராஜன், தாந்தோன்றிமலையை சார்ந்த சுரேஷ் ஆகிய 3 பேர் திண்டுக்கல் சென்ற நிலையில், அவர்களை மதுரை கும்பல் கடத்திக் கொண்டு போய் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட தியாகராஜனின் உறவினர் அஜீத் கொடுத்த புகாரின் அடிப்படையில், தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து கடத்தப்பட்டவர்களை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த ரவிக்குமார் (வயது 42), மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த சிவகுமார், தோடனேரியை சேர்ந்த குமார் (வயது 47), முத்துப்பாண்டி (வயது 50), எஸ்.ஐ கோட்டர்ஸை சேர்ந்த கருப்பு சாமி, விளாங்குடியை சேர்ந்த கண்ணன் ஆகியோரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
அதே போன்று பலகோடி மதிப்புள்ள இரிடியத்தை தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய கரூர் கும்பல் மீது கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த நாகை கோட்டையை சேர்ந்த வாசு என்கின்ற குமரேசன் (வயது 27), கரூர் காந்தி கிராமத்தை சார்ந்த பொன்னரசன் (வயது 38), இந்திரா நகரை சேர்ந்த பால்ராஜ் என்ற ஹரீஸ் (வயது 41), ராஜா நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 43), தாந்தோன்றிமலை அசோக் நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 41), திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கோவிலூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) ஆகியோரை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரிடியம் எனக் கூறிய அண்டா சில்வர் பாத்திரம், கெமிக்கல்கள், கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆள் கடத்தல் மற்றும் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 12 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.