ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாடு இன்று காலை தொடங்குகிறது. இதையொட்டி காலை 9 மணி அளவில் பிரதமர் மோடி மாநாடு மண்டபத்துக்கு வந்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது மண்டபத்தில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமரை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து மாநாட்டு மண்டபத்துக்கு உலகத்தலைவர்கள் வரத்தொடங்கினர். அவர்களை மாநாட்டு மண்டப முகப்பில் நின்று பிரதமர் மோடி வரவேற்று கைகுலுக்கினார்.
மாநாட்டையொட்டி டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டில்லி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. டில்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. பிரம்மாண்டமாக நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு, மக்களை மையமாக கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியில் புதிய பாதையை வகுக்கும். உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்.
தொழில்நுட்ப பரிமாற்றம், டிஜிட்டல் பொது கட்டமைப்பு போன்ற எதிர்கால துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், உலக அமைதியை உறுதி செய்யவும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம்.
பின்தங்கியவர்களுக்கும் சேவை செய்யும் மகாத்மா காந்தியின் அணுகுமுறையை பின்பற்றுவது முக்கியம். நட்புறவு, ஒத்துழைப்பை பலப்படுத்த பல நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
இந்த உச்சி மாநாட்டுக்கு வரும் நமது விருந்தினர்கள், இந்தியாவின் உற்சாக விருந்தோம்பலால் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். ஜி20 நிறைவு விழாவில், உலகத் தலைவர்கள் ஒரு குடும்பமாக இணைந்து ஆரோக்கியமான உலகுக்கு, ஒரே எதிர்காலத்துக்கான தங்களின் கூட்டு தொலைநோக்கை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். பின்னர், லோக் கல்யாண் மார்க்சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்கு அதிபர் பைடன் சென்றார். அவரை மோடி வரவேற்றார்.
பிறகு, அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். போர் விமான இன்ஜின் தயாரிப்பு ஒப்பந்தம், ட்ரோன்கள் கொள்முதல், 5ஜி மற்றும் 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கூட்டாக செயல்படுவது, சர்வதேச விவகாரங்கள் உட்பட பல விஷயங்கள்குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டில்லி வந்தஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஓமன் பிரதமர் சுல்தான் ஹைதம் பின்தாரிக் அல் சயீத், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரோஸ், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில்ரமபோசா ஆகியோருக்கும் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபிறகு, ஜோ பைடன் இந்தியா வருவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் தங்கியுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.