Skip to content

மயிலாடுதுறை மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்…. இன்று கடலுக்கு சென்றனர்

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவிரைவு இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகு இந்த மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும்,

வருகின்ற 18 ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் மாநாட்டில்
கலந்து கொள்ளும் தமிழக முதலமைச்சரிடம் 9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் அனைவரும் நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்க வேண்டும்,

மாவட்ட ஆட்சியரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை மீன்பிடித் தொழிலை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 9 மாவட்ட மீனவ கிராமங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நான்கு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர்

தொழில் மறியல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தின் அறிவிப்பை தொடர்ந்து
இன்று வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!