கரூர் மாவட்டம் புகழூர் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காவிரி ஆற்றில் சிக்கிக்கொண்டவர்களை எப்படி காப்பாற்றுவது, காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது, வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது. மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது. இடி, மின்னல் தாக்கினால் எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் ரப்பர் படகை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்றவற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது போன்று செயல்விளக்கம் செய்து காட்டினர்.