உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயிலின் இரண்டு பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு பெட்டிகளும் மற்றொரு ரெயிலுடன் இணைக்கப்பட்டு, பின்னர் புறப்பட இருந்தது.
இந்த நிலையில், ரெயில் பெட்டியில் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, ரெயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் தப்பியோடி விட்டனர். ஆனாலும் தீயில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர் . சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்ட விரோதமாக ரயிலில் சமையல் காஸ் சிலிண்டர் கொண்டுவரப்பட்டதே விபத்துக்கு காரணம் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.