அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிர் புறம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள்பகுதியில் இருந்து நண்பகல் நேரத்தில் திடீரென புகை வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
மரத்தின் அருகே சென்று பார்த்த போது, புளியமரத்தின் அடிப்பகுதியில் இருந்து மேல் பாதி தூரம் வரை உள்பகுதியில் குடைந்து மரித்து போன நிலையில் இருந்தது. இந்நிலையில் தீயானது மரத்தில் உள்பகுதியில் எரிந்து புகை, புகையாக வந்துள்ளது.
மரம் எரிந்து விழுந்து சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தீயை அணைப்பதற்காக அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வரும் நீலமேகம் என்பவர் தனது வாட்டர் சர்வீஸ் பைப்பு மூலம் மரத்தின் உள்பகுதியில் தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அது பயனளிக்கவில்லை. இதையடுத்து நீலமேகம் ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மரத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்த வழியாக தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இன்று அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில், ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் இருந்து வந்த தீயால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் மரம் எரிந்ததா அல்லது அவ்வழியே சென்ற யாரேனும் எறிந்த சிகரெட் அல்லது பீடியால் மரத்தில் தீ பரவியதா என்பது தெரியவில்லை.