திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42).இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2011ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 42 வங்கி கடன் வாடிக்கையாளர்களை இவரே ஏற்பாடு செய்து அவர்களது கணக்குகளில் சுமார் 200 சவரன் போலியான நகைகளை வைத்து 1 கோடியே 30 லட்சம் மதிப்பில் பண மோசடி செய்துள்ளார்.
இதனை அறிந்த மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் ராஜன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் உட்கோட்ட (பொறுப்பு) மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் திருப்பத்தூர் நகர போலீசார் பாஸ்கரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உண்மை தன்மை அறியப்பட்டு அவர் மூலமாக 42 நபர்களின் வெவ்வேறு கணக்குகளில் வைக்கப்பட்ட 42 வகையான போலி நகைகளை பறிமுதல் செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாஸ்கரனை சிறையில் அடைத்தனர்.