உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் இருக்கின்றது.
ஆனால், மதுரையில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக 5 பேர் கொண்ட கும்பல் பக்தர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். விமான டிக்கெட் கட்டணமாக அவர்கள் வசூலித்த பணத்தில் அவர்களிடம் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விமான டிக்கெட்டுடன் 106 பேர் மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். பெட்டி படுக்கைகளுடன் விமானநிலையத்திற்குள் நுழைய வந்தவர்களை தடுத்த நிறுத்திய சிஐஎஸ்எப் வீரர்கள் டிக்கெட்டை பரிசோதித்து பார்த்தனர். அப்போதுதான் அவர்கள் வைத்திருந்தது போலி டிக்கெட் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து இண்டிகோ விமான நிலைய ஊழியர்களிடம் செக் செய்த போது அயோத்திக்கு செல்ல முன்பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 106 பேரிடமும் கொண்டு வந்தது போலி டிக்கெட் என இண்டிகோ நிர்வாகம் தெளிவுப்படுத்தியது. அதிர்ச்சியடைந்த 106 பேரும் சோகத்துடன் திரும்பி சென்றனர். பணம் வசூல் செய்து போலி விமான டிக்கெட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.