அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் கடந்த 31ம் தேதி அவர் விடுதலையானார். அப்போது அவரை வரவேற்க திருச்சி மத்திய சிறையில் அதிமுகவினர் திரண்டனர்.
சிறை வளாகத்தில் புகுந்த அதிமுகவினர், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி வரை தாராளமாக சென்று விஜயபாஸ்கரை வரவேற்றனர். இதை சிறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிமுகவினர் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தாராளமாக நடமாடினர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அதிமுகவினர் இவ்வளவு தாராளமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களே, அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருக்க அதிமுக என்ன செய்தது? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து இ தமிழும் கேள்வி எழுப்பி இருந்தது. இதைப்பார்த்த சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, விஜயபாஸ்கரை வரவேற்க அதிமுகவினர் அனுமதிக்கப்பட்டதை ஆய்வு செய்ய அதற்கான வீடியோவை பார்வையிட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
இதைத்தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஸ்வர் தயாள் இது குறித்து திருச்சி சிறைத்துறை டிஐஜி பழனியிடம் விளக்கம் கேட்டார். அதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய டிஐஜி பழனி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விடுதலையின்போது பொறுப்பில் இருந்த ஏட்டு கணேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அத்துடன் அன்று பொறுப்பில் இருந்த போலீஸ்காரர்கள் காளிமுத்து, சக்திவேல், அசாருதீன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மெமோவும் கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறைத்துறையில் விசாரித்தபோது, உயர் அதிகாரிகள் அனுமதியின்றி ஏட்டுவும், போலீஸ்காரர்களும் அதிமுகவினரை சிறைக்குள் இவ்வளவு தாராளமாக அனுமதித்திருக்க மாட்டார்கள். பிரச்னை வந்ததும் ஏட்டுவை மட்டும் பலிகடா ஆக்கி விட்டனர். போலீஸ்காரர்களான தங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு நாங்கள் மட்டும் தான் பொறுப்பா? என ஏட்டுவும், போலீஸ்காரர்களும் குமுறுகிறார்கள்.