விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது அதிமுக நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வீரவாள் வழங்கினர்.
அப்போது விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் மாபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்க வந்தார். அவர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவிக்காமல், மாபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்க சென்றதை ராஜேந்திர பாலாஜியால் பொறுக்க முடியவில்லை.
நாற்காலியில் இருந்து எழுந்த ராஜேந்திர பாலாஜி, ஏய், நீ எந்த ஊர்காரன்டா, ஆள் பார்த்து பொன்னாடை போடுறியா? கொன்னுபுடுவேன் என ேகாபமாக பேசியவாறு நந்தகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டார்.இதனால் மற்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே விருதுநகர் மாவட்ட அதிமுகவில் பாண்டியராஜனுக்கும், ராஜேந்திர பாலாஜிக்கும் ஆகாது. ராஜேந்திர பாலாஜியின் தொல்லை தாங்காமல் தான் அவர சென்னையில் அரசியல் செய்து வந்தார். அங்கு தோல்வி அடைந்ததால் மீண்டும் விருதுநகர் நோக்கி அவர் நகர்ந்தார். இது ராஜேந்திர பாலாஜிக்கு பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் மாபாவை எதிரியாகவே பார்த்து வந்தார்.
மாபா பாண்டியராஜன் மீதுள்ள கோபத்தில், கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார் ராஜேந்திர பாலாஜி,பதவி இல்லாத நிலையில் இந்த அட்டகாசம் தேவையா என மற்ற நிர்வாகிகள் முணுமுணுத்துக்கொண்டனர்.ராஜேந்திரபாலாஜியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
நேற்று மதியம் கோபிசெட்டிபாளையத்தில், செங்கோட்டையன் கூட்டத்தில் தொண்டர்கள் அடிதடி நடந்த நிலையில், இப்போது முன்னாள் அமைச்சரே நிர்வாகியை தாக்கிய சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.