காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டி தொடர்பாக அதிமுக கூட்டணி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை போட்டியிட்ட யுவராஜ் தான் மீண்டும் அங்கு தமாகா சார்பில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. நேற்று மாலை கட்சித்தலைவர் வாசன், எடப்பாடியை சந்தித்து இது தொடர்பாக பேசி முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்றும் வாசனும், எடப்பாடியும் சந்தித்து பேச உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, தனக்கு அடுத்தபடியாக வந்த த.மா.கா. வேட்பாளர் யுவராஜாவை 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), – 67,300 யுவராஜா (தமாகா) – 58,396 கோமதி (நாம் தமிழர் கட்சி) – 11,629 ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) – 10,005 நோட்டா – 1,546 முத்து குமரன் (அமமுக) – 1,204 ஆறுமுக கண்ணன்(ஏபோல்) – 373 கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ்) – 372 மீனாட்சி (சுயேச்சை) – 299 ஷாஜகான் (சுயேச்சை) – 256 யுவராஜ் (சுயேச்சை) – 235 சண்முகவேல் (எம்.ஜி.எம்.கே.) – 151 ராஜா (எம்.டி.எம்.கே.) – 102 அந்தோணி பீட்டர் (சுயேச்சை) – 96 மின்னல் முருகேஷ் (சுயேச்சை) – 73