நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பத்தேரி பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை கண்ட யானை திடீரென அவர் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது தனது தும்பிக்கையால் அந்த நபரை பிடித்து எடுத்த யானை சாலையோரம் இருந்த தடுப்பை தாண்டி அவரை வீசி எறிந்தது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் முதியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். நடுவில் தடுப்புகள் இருந்ததால்
யானையும் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றது. இந்நிலையில் முதியவரை யானை தூக்கி வீசும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக இரவு ரோந்து பணியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.