அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. இன்று காலை எடப்பாடி சென்னை திரும்புகிறார். இதற்காக விமான நிலையம் புறப்பட்ட எடப்பாடியை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:
நேற்று அமித்ஷாவை சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து அவரது கவனத்துக்கு கொண்டு வந்தோம். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதியை விடுவிக்க வேண்டும். இருமொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு பாதகம் வரக்கூடாது. கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தான் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். முல்லை பெரியார் அணை பிரச்னை, தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதை பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.
கேள்வி: தேர்தல் கூட்டணி குறித்து பேச வில்லையா?
உங்கள் பத்திரிகைகளில் தான் அப்படி செய்தி வந்துள்ளது. நாங்கள் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன். அப்போது நேரம் இருந்தால் அமித்ஷாவை சந்திக்கலாம் என நேரம் கேட்டோம். நேரம் கொடுத்தார்கள் சந்திந்தோம்.
கேள்வி: 40 நிமிடம் இதைத்தான் பேசினீர்களா?
மக்கள் பிரச்னை குறித்து தான் பேசினோம். ஒவ்வொரு பிரச்னை குறித்தும் விவரமாக எடுத்து சொன்னோம். கவனமாக கேட்டார். தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினோம்.
தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமையும். கூட்டணி வேறு. கொள்கை வேறு. கடந்த தேர்தல்களில் எப்போது கூட்டணி அமைந்தது. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மா
றும். தேர்தல் வரும்போது தான் அது அமையும். மக்கள் பிரச்னையை தீர்க்கத்தான் வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.