நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக கூறிய தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் பின்னர் அதனை மறுத்தது. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லைஎன்றும் கூறியது. எனினும் இந்த நிலநடுக்கத்தினை உணர்ந்ததாக அங்குள்ள மக்கள் பதற்றத்துடன் கூறினர்.
திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்து உருண்டன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் கூறினர். பறவைகள் , விலங்கினங்கள் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசகமாக அலறியதாகவும், மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
ஏற்கனவே நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.