மதுரை மாநகராட்சி 56- வது வார்டு பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கழிவுநீர் தனது வீட்டின் முன்பாக தேங்கி இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 56- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர் விஜயகுமார் வீட்டின் முன்பாக தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதுகுறித்து கணேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து 56- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக உதவிப் பொறியாளர் விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டது மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.