தொகுதிகள் மறுசீரமைப்பு அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அப்படி மறு சீரமைப்பு நடைபெறும்போது, தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். அல்லது இதே அளவில் நீடிக்கும். ஆனால் வட மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்த்தப்படும் நிலை உள்ளது. அப்படி வட மாநிலங்களுகு்கு தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக ஆலோசிக்கவும், மத்திய அரசை வலியுறுத்தவும் வரும் 22ம் தேதி சென்னையில் தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டி உள்ளார். இந்த நிலையில், டில்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள், இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி முழக்கமிட்டனர். சுமார் 100 எம.பிக்கள் இதில் பங்கேற்றனர். அவர்கள் கையில் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக நாடாளுமன்ற குழு த் தலைவர் கனிமொழி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வைகோ, திருமாவளவன், ஆ. ராசா, அருண் நேரு, துரை வைகோ, திருச்சி சிவா, தயாநிதி மாறன், மற்றும் பஞ்சாப் எம்.பிக்களும் பங்கேற்றனர்.