இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.
அதன்படி, அக்டோபர் மாதம் 29-ந் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று ரயில் டிக்கெட் முன்பதிவு நடந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் டிக்கெட்டுகள் 15 நிமிடத்திலேயே விற்றுத்தீர்ந்தன.
இதேபோல, கன்னியாகுமரி, நிஜாமுதீன், அனந்தபுரி, திருச்செந்தூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், அக்டோபர் 29-ந் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும், அக்டோபர் 30-ந் தேதி பயணம் செய்பவர்கள் நாளையும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு ரயில்களில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். குறிப்பாக தென்னக ரயில்வேயில் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக மதுரை, நெல்லை வழியாக செல்லும் ரயில்கள் தான் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் செல்கிறது. உடனுக்குடன் டிக்கெட் விற்றுத் தீர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.