தமிழ்நாடு முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களாக தான் இருந்தன. வெளிமாநில பதிவு எண்களை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று கடந்த 6 மாதத்திற்கு முன்பு தமிழக போக்குவரத்து துறை சார்பில் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவு பெற்றது. எனவே நேற்று முதல் விதிகளை மீறி வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டால் பஸ்களை பறிமுதல் செய்யவும் அபராதம் விதிப்பதும் உள்ளிட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறு வெளிமாநில எண்ணில் பதிவாகி இருந்த பஸ்களில் முன்பதிவு செய்திருந்தால் அந்த முன்பதிவை ரத்து செய்து கொள்ளமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கும்பகோணம் வாட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோகிலா தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று கும்பகோணம் புதிய பஸ் நிலையம் பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டால் அந்த பஸ்சின் ஆவணங்கள் அனைத்து சரியாக உள்ளதா எனவும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். ஒரு சில பஸ்களில் ஆவணங்களை தனியாக கோப்புகளில் வைக்காமல், செல்போனில் வைத்திருந்ததால் அவர்களிடம் ஆவணங்கள் அனைத்தையும் பேப்பா் வடிவில் எடுத்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தினர். வழக்கமாக கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படும். ஆனால் இந்த திடீர் ஆய்வினால் கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் ஆம்னி பஸ்கள் அதிக அளவு இல்லை.