Skip to content

டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சீமான் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அவதூறு  பரப்பி, உள்நோக்க த்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார். இதனால் நானும், என் குடும்பத்தாரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். அவர் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவர் ரூ. 2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் எனவும் வழக்கில்  குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், டிஐஜி வருண்குமார் கடந்த டிச.30ம் தேதி ஆஜராகி, புகார் குறித்து சாட்சியம் அளித்தார். அதோடு புகார் தொடர்பான ஆவணங்கள், வீடியோ பதிவு (பென்டிரைவ்), பத்திரிகை செய்திகள் தன்னால் வழங்கப்பட்டது என்பதையும் டிஐஜி உறுதி செய்தார்.
வழக்கு விசாரணை ஜனவரி 7 ம் தேதிக்கு  தள்ளி வைக்கப்பட்ட நிலையில், நேற்று வழக்கு  விசாரணைக்கு வந்தது. டிஐஜி வருண்குமார் விசாரணைக்கு  நேரில் ஆஜரானார்.

டிஐஜி தரப்பு சாட்சிகளாக புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியை சேர்ந்த கார்த்திக் ராஜா (33) , கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களை பதிவு செய்தனர். வழக்கு விசாரணை ஜனவரி 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசாரணை முடிந்து டிஐஜியுடன் வெளியே வந்த அவரது வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். முடிந்தால் தண்டனை வாங்கி கொடுத்திடு பார்ப்போம் என அவர் கூறியிருப்பது டிஐஜிக்கு விடப்பட்ட சவாலா அல்லது நீதிமன்றத்துக்கு விடுத்த சவாலா ? எனத் தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது இவ்வாறு கடுமையாக பேசுவது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

error: Content is protected !!